×

ஆற்காடு அருகே பயங்கரம் விவசாயி கொலையில் கள்ளக்காதலி உட்பட 3 பேர் சிக்கினர் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

ஆற்காடு, மே 30: ஆற்காடு அருகே கழுத்து அறுத்து விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை இருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(36), விவசாயி. இவரது மனைவி சாந்தி(33). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் இருந்த ரங்கநாதனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து, வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை கலவை அடுத்த மேல்நெல்லி கிராமம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில், பீர்பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு ரங்கநாதன் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வம், கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ரங்கநாதனின் செல்போனை கைப்பற்றி அதில் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதி கீழாண்டை ெதருவைச் சேர்ந்த விஜயராம் என்பவர் போன் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது நண்பர் அருள், விஜயராமின் தாயார் லதாவிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

இருங்கூர் அடுத்த சிவராமபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி லதா(40). இவர்களுக்கு விஜயராம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தசாமி திருமணமான சில ஆண்டுகளிலேயே மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். லதா கொலையான் ரங்கநாதனின் அத்தை ஆவார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லதாவிற்கும், கொலையான ரங்கநாதனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. லதாவின் மகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ரங்கநாதன் ₹2.5 லட்சம் செலவு செய்தாராம். இந்நிலையில் லதாவிற்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனுக்கும், லதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரங்கநாதன், தான் செலவு செய்த ₹2.5 லட்சத்தை அடிக்கடி கேட்டு தகராறு செய்தாராம். இதில் ₹1.80 லட்சத்தை லதா திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணத்தை கேட்டு ரங்கநாதன், லதாவிடம் தொடர்ந்து தகராறு செய்து தாக்கினாராம். மேலும் லதாவை பார்க்கும்போதெல்லாம் பணத்தை கேட்டு திட்டினாராம். இதனால் மனவேதனையடைந்த லதா, தனது மகன் விஜயராமிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து ரங்கநாதனை தீர்த்துக்கட்ட விஜயராம் முடிவு செய்துள்ளார். அதற்கு துணையாக திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த வேலம் நத்தம் கிரமத்தைச் சேர்ந்த தனது நண்பர் அருள் என்பவரையும் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவு 9 மணியளவில் ரங்கநாதனுக்கு, விஜயராம் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ள வருமாறு கூறினாராம். இதையடுத்து ரங்கநாதன், விஜயராம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
பின்னர் விஜயராமும், அவரது நண்பர் அருள், ரங்கநாதன் ஆகியோர் சேர்ந்து மது குடித்துள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து பைக்கில் ரங்கநாதனை நடுவில் உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயராம், ரங்கநாதனின் கழுத்தை அறுத்து, பீர் பாட்டிலால் குத்தியுள்ளனர். பின்னர் அவரை மேல்நெல்லி சுடுகாடு செல்லும் வழியில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விஜயராம், அவரது தாய் லதா(40), நண்பர் அருள் ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : killing ,Kallakadali ,Arcot ,
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...