×

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு அதிமுக, திமுகவினர் இடையே மோதல்

தாம்பரம், மே 30: தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில் நடந்தது. திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை  தலைவரும், அதிமுக நகர செயலாளருமான கூத்தன் தலைமையில் அதிமுகவினர் அங்கு வந்தனர். பின்னர் கூட்டத்தை ஏன் தாமதமாக ஆரம்பித்தீர்கள் என ஆர்டிஓவிடம் கேட்ட அதிமுக நிர்வாகி கூத்தன், ஜமாபந்தி மேடையில் அமர்ந்தார். அதற்கு திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பிரதிநிதிகள் மேடையில் அமர வேண்டும். அதிமுக நகர செயலாளர் எப்படி மேடையில் அமரலாம் என ஆர்டிஓவிடம் ராஜ்குமாரிடம் கேட்டார். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அவர்கள் நாற்காலிகள் மற்றும் செருப்புகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கண்டித்துகோஷமிட்டனர். அதன் பின்னரும் நாற்காலிகள், செருப்புகளை வீசி தாக்கி கொண்டனர். அவை பெண் எஸ்ஐ மற்றும் போலீசார் மீது விழுந்தது. இதையடுத்து ஆர்டிஓ ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள், கூட்டத்தை ரத்து செய்து விட்டு சென்றனர். ஆனால் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரி ஜமாபந்தி நடந்த இடத்தில் திமுகவினர் திரண்டு இருந்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், இரு தரப்பினரும் வெளியேறினர். இதுகுறித்து தாம்பரம் ஆர்டிஓ ராஜ்குமார் கூறுகையில், ‘ஜமாபந்தி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த கூட்டங்களின்போது ரத்து செய்யப்பட்ட ஜமாபந்தி கூட்டம் நடைபெறும்’’ என்றார். எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ‘ஜமாபந்தியில் மனு அளிக்க பொதுமக்கள் 300 பேர், வந்திருந்தனர். மோதலை காரணம் காட்டி ஆர்டிஓ ராஜ்குமார் ஜமாபந்தி கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் நல பணிகள் நடப்பதில்லை. மனுக்கள் வழங்கும் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். தரகர்களை வைத்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்

Tags : Clash ,AIADMK ,office ,Tambaram taluk ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்