திருச்சி, மே 29: திருச்சி என்ஐடியில் டெக்யூப் 111 உதவியுடன் சர்வதேச மின், மின்னியல் பொறியியல் (ஐஇஇஇ) சார்பாக ‘நுண்ணலை பொறியியல் குறுகிய மின் சுற்றுகள், ஒளியியல் பொறியியல், கம்பியில்லா தொடர்பியல்’ என்னும் உயர் தொழில்நுட்ப சர்வதேச கருத்தரங்கு 3 நாள் நடந்தது.
இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பொறியியல் நிறுவனங்களை சேர்ந்த 400 ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டமைப்பின் தரத்தை நிர்ணயம் செய்ய ஐஇஇஇ, யுஎஸ்ஏவின் தூதுவராக ஜப்பான் நாட்டு பேராசிரியர் முகமது மதியன் பங்கேற்றார். ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி கழகம்(டிஆர்டிஒ), முன்னாள் தலைவரும் ராணுவ அமைச்சரின் முன்னாள் செயலருமான டாக்டர் கிறிஸ்டோபர், ராணுவ தளவாடஙகள் மற்றும் உதிரிபாகங்களை நுண்மயமாக்க நுண் அலை பொறியியல் ஆற்றும் பங்கினை விளக்கினார்.
அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியரும், ஆண்டெனா நிபுணருமான தபன்குமார் சர்கார் பேசுகையில், நுண் அலைப்பொறியியல் மாணவர்கள் நினைப்பது போன்று கடினமான பாடப்பிரிவு அல்ல என ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தினார். துறையின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்களின் கடின உழைப்பும் ஒற்றுமையுடன் ஆற்றிய ஒருவருட கால பணியே சுமார் 300 ஆய்வுக்கட்டுரைகள் ஈர்க்கப்பட்ட உயரிய கருத்தரங்கு என துறை தலைவர் டாக்டர் லெட்சுமி நாராயணன் கூறினார்.
மருத்துவ சுற்றுலா இன்று பாரதத்தில் உலகத்தரம் வாய்ந்து நாளுக்கு நாள் முன்னேறி வருவதன் காரணமே நுண் அலைப்பொறியியல், ஒளியின் தொழில்நுட்பம், கம்பியில்லா பொறியியல் என்று மூன்று காரணிகளாகும் என புரவலரும், துறை மூத்த சிறப்பு பேராசிரியருமான ராகவன் விளக்கினார். நாட்டின் 31 தேசிய தொழில்நுட்ப கழகங்களில் மிக அதிக மதிப்பெண்கள் (கிரடிட் பாய்ன்ட் மதிப்பு புள்ளகள் 456) பெற்று முதலிடத்தில் உள்ள ராகவனின் 40 ஆண்டு கால சாதனையை கருத்தில் கொண்டு வாழ்நாள் சிறப்பு நுண் அலைப் பொறியியல் சாதனையாளர் விருதை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி முதல்வர் அபய்குமார், மூத்த பேராசிரியர் வெங்கடரமணி, தபன்குமார் சர்கார், ஐஐஐடி இயக்குனர் சர்மா, ஜப்பான் பேராசிரியர் முகமது மதியன் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டார்.
புனே ராணுவ அதிநவீன தொழில்நுட்பக்கழக துறைத் தலைவர் ரே, ராடார் வரைமுறை வழிபடுத்தல், திட்டமிடுதல் பற்றி பேசினார்.
கருத்தரங்கின் முடிவில் என்ஐடி இயக்குனர் மினிஷாஜி தாமஸ் பேசுகையில், வருங்காலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற கருத்தரங்கம் நடத்தப்படும் என்றார். என்ஐடி திருச்சி ஐஇஇஇ நுண் அலைப் பொறியியல் சங்கம் ராகவன் மற்றும் கிருஷ்ணகாந்த் தலைமையில் புதிதாக தொடங்கப்பட்டது.