×

கூத்தாநல்லூர் அருகில் மணக்கரை வெட்டுக்குளம் தூர்வாரும் பணி தீவிரம்

கூத்தாநல்லூர், மே 29: கூத்தாநல்லூர் அருகே மணக்கரை கிராமத்தில் உள்ள வெட்டுக்குளத்தை அரசு தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு தரவேண்டும் என கடந்த 8ம் தேதி தினகரன் செய்தி வெளியிட்டதையடுத்து அதன் எதிரொலியாக வெட்டுக்குளம்  தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. கூத்தாநல்லூரில் இருந்து கம்மங்குடி செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பது மணக்கரை கிராமம். இந்த கிராமத்தின் மத்தியில் அமைந்திருப்பதுதான் வெட்டுக்குளம். சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களின் குளியலுக்கும், நிலத்தடி நீர் குறைவில்லாமல் கிடைப்பதற்கும், குறிப்பாக ஆடுமாடுகள் தாகம் தீர்ப்பதற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது இந்த வெட்டுக்குளம்.  

கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் முறையாக தூர்வாரப்படவில்லை. மேலும் சமீபத்தில் அடித்த கஜா புயலினால் இந்த குளத்தில் ஏராளமான மரங்களும் முட்செடிகளும் விழுந்து குளத்தை பாழ்படுத்தியிருந்தது. . அதனால் இந்த குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு முட்செடிகள் மண்டி பயனற்று கிடந்தது. அரசு உடனடியாக தலையிட்டு வெட்டுக்குளத்தில் கிடக்கும் முட்செடிகளை அகற்றுவதுடன், தூர்வாரி, மக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறைகள் அமைத்து  தரவேண்டும். மேலும்  இந்த குளம் தற்போது மேடாக ஆகிவிட்டதால்  குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது.

அதனால் 15 அடிகளில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 50லிருந்து  60 அடி கீழே போய்விட்டது. குளத்தை தூர்வாருதல் ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு என மணக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறித்து கடந்த 8ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடுத்து குளத்தின் கரையை பலப்படுத்தும் முதல்கட்டப்பணிகளை தற்போது ஊர்பகுதியை சேர்ந்த தனியார் நிர்வாகம் துவங்கியுள்ளது. மேலும் இந்த குளம் ஆழப்படுத்தப்பட்டு முட்செடிகளும் அகற்றப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தனியார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி செய்தி வெளியிட்ட தினகரனுக்கு அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : intersection ,sand dungeon ,Koothanallur ,
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா