பொள்ளாச்சி, மே 29: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வடமாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டுவந்த 2200டன் மக்காசோளம், லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் உடுமலை, பழனி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகள் செயல்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவைப்படும் தீவனமான மக்காசோளம், வெளி மாநிலங்களில் இருந்தே ரயில் மூலம் டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது. தற்போது, வடமாநிலங்களில் மக்காசோளம் அறுவடை காலம் என்பதால், அங்கிருந்து அதிகளவு மக்காசோளம் கொண்டு வருவது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பீகார் மாநிலத்திலிருந்து இரண்டு சரக்கு ரயில்களில், 5200டன் மக்காசோளம் கொண்டு வரப்பட்டது. அவை, லாரிகள் மூலம் அந்தந்த பகுதி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது.
நேற்று முன்தினம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், நேற்று உடுமலை மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதி தொழிற்சாலைகளுக்கும் மக்காசோளம் கொண்டு செல்லும் பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ரயிலில் இருந்து மூட்டைகளை இறக்கி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல 280 லாரிகள் பயன்படுத்தப்பட்டது. சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட மக்காசோள மூட்டைகள் நேற்று இரவுடன் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நிறைவுபெற்றது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து, சுமார் 2600டன் கோதுமை மூட்டைகள் ஏற்றிய சரக்கு ரயில்கள், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.