×

3 பேருக்கு வலைவீச்சு அரியலூர் அரசு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர அழைப்பு

அரியலூர், மே 29: அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கென 20 பள்ளி விடுதிகள், 2 கல்லூரி விடுதிகள், மாணவியர்களுக்கென 9 பள்ளி விடுதிகள், ஒரு கல்லூரி விடுதி என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் அனைத்து  மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

விடுதியில் தங்கி பயிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். பள்ளி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கிற மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ- மாணவியர்களும் சேர தகுதியுடையவர்கள்.

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். விடுதியில் சேர மாணவ- மாணவியரது பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. எனவே மாணவ, மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur Government Hostels ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா