பாடாலூர், மே 29: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை நடந்தது. ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தனி சன்னதியில் உள்ள செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமான் உள்ளார்.
இவரது ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குபேரன் சன்னதி முன்பு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் பால், தயிர், குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.