மயிலாடுதுறை, மே 29: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உலக நலன் பெறவும், மழை பெய்து உலகம் செழிக்க வேண்டியும் சிறப்பு ருத்ர யாகம் விநாயகர் பூஜையுடன் நடந்தது. முன்னதாக திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தின் விநாயகருக்கு அருகே மகாயாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க ஆதீனத்தின் ஓதுவாமூர்த்திகளின் தேவார திருவாசக பாடல்களுடன், நாதஸ்வர மேளதாள இன்னிசைகளுடன் 108 வகையான யாக பொருட்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது. பின்னர் பூர்ணாஹீதி நடந்தது. பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிகபராமாச்சார்ய சுவாமிகள் ஆதீனகட்டளை தம்பிரான்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.