சேலம் மே 29: சேலம் மாவட்டத்தில் தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரியா நாட்டு கலைகளில் ஒன்றான தேக்வாண்டோ விளையாட்டு போட்டி 10 சதவீதம் கையாலும், 90சதவீதம் கால்களாலும் விளையாடிய கூடிய ஒன்றாக திகழ்கிறது. தேக்வாண்டோ விளையாட்டு சப் ஜூனியர்(8-12), ஜூனியர்(12-14), கேடட்(14-17), சீனியர்(17 மேல் வரை) என்ற 4பிரிவுகளிலும், எடை பிரிவிலும் நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேக்வாண்டோ போட்டிகளில் அதிகளவில் சாதித்து வருகின்றனர். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்காக பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்படி பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் ஏழ்மை காரணமாக பெரும்பாலான மாணவர்கள், தொடர்ந்து பயிற்சிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயிற்சியாளர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஏழ்மையால் அவர்கள், உரிய பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காந்தி ஸ்டேடியத்ததில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகள் வரை பங்கேற்றுள்ளனர். போட்டியில் பங்கேற்க தேவையான உபகரணங்கள் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். தமிழக விளையாட்டு துறை ஆணையம் விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து விளையாட்டில் சாதித்து வரும் மாணவிகளுக்கு அரசாங்கம் உதவிகரம் நீட்டினால் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். ஏராளமான மாணவர்களுக்கு திறமை இருந்தும் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் திறமைகளை ஊக்குவித்து வெளியுலகம் அறியச் செய்ய, அரசும் விளையாட்டு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு பயிற்சியாளர்கள் கூறினர்.