போச்சம்பள்ளி, மே 29: குன்னத்தூர் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992-94ம் ஆண்டு வரையிலும் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பூவலிங்கனார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் யுவராஜ், சம்பத், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், சுப்ரமணி, சீனிவாசன், குலாப்ஜான் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பெருமாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், தங்களின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பள்ளிப்பருவத்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், அனைவரும் செல்பி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.யோகா பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வஜ்ரவேல், பெருமாள், முருகன், வேலன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.