மதுராந்தகம், மே 29: மதுராந்தகம் நகராட்சியில், நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனது. இதையொட்டி, மதுராந்தகம் நகராட்சியில், கடும் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த குடிநீர் பற்றாக்குறையை, உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுராந்தகம் நகரமன்ற முன்னாள் உறுப்பினர் தயாளன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் மணி, ராமலிங்கம், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மதுராந்தகம் வட்ட குழு உறுப்பினர்கள் வாசுதேவன், பொன்னுசாமி, ஆட்டோ சங்க நிர்வாகி இளங்கோ, மாவட்ட குழு உறுப்பினர் மாசி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.