×

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஒரே இடத்தில் வழங்க வேண்டும்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மே 29: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்காக மக்கள், 3 அலுவலகங்களுக்கு அலையும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு வீண் அலைச்சலும் கால தாமதமும் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையொட்டி ஒரே இடத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லைகளில் நடைபெறும் பிறப்பு, இறப்பு பதிவுகள் அந்தந்த உள்ளாட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்படுகின்றன.இதனிடையே கிராமப்புற பிறப்பு, இறப்பு பதிவேடுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, அந்தந்த கிராமங்களின் சொத்துக்கள் பதிவு செய்யப்படும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

சார்பதிவாளர், அரசு ஆணையின்படி பிறப்பு, இறப்பு பதிவாளராகவும் செயல்படுவதால் இதுபோல் மாற்றம் செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. அரசின் இந்த செயல்பாட்டால் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. 1900ம் ஆண்டில் தொடங்கி 1970ம் ஆண்டு வரை பிறப்பு , இறப்பு பதிவேடுகள் சார் பதிவகங்களிலும், 1971ம் முதல் 2000ம் ஆண்டு வரை வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இதற்காக ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டம், வாரிசு சான்றிதழ் பெறுதல் போன்ற காரணங்களுக்காக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய நிலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அந்தந்த சார் பதிவு அலுவலகங்களில் இருந்து குறிப்பிட்ட ஆண்டின் பிறப்பு அல்லது இறப்பு பதிவேடுகளை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பெற்று செல்கின்றன. ஆனால், அவை திரும்ப வழங்குவதில்லை.

இதனால் 1970க்கு முந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படுவோர் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கும், பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் செல்கின்றனர். 2 இடங்களிலும் குறிப்பிட்ட ஆண்டின் பதிவேடு இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றம் போன்ற இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் ₹10 நீதிமன்ற வில்லை ஒட்டி மனு செய்து குறிப்பிட்ட பிறப்பு,  இறப்பு பதிவு இல்லை என அந்தந்த அலுவலகத்தில் சான்று பெற்றால் மட்டுமே அடுத்த அலுவலகத்தில் அதை தேடிப்பார்க்கின்றனர். இதனால் சான்று கேட்டு விண்ணப்பம் செய்வோர், குறைந்தது 3 அல்லது 4 அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர்.

இதையடுத்து, வெறுத்துப்போய் கோட்டாட்சியரிடம் மனு செய்து புதிதாக பதிவுசெய்து சான்று பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே பெற வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து, அவற்றை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களும் கணினி மயமாக்கப்பட்டு விட்டன. ஆனால், மாநகராட்சி போன்று ஆன்லைனில் நாமே தேடிப்பார்த்து பிரிண்ட் எடுக்க முடியாத நிலை உள்ளது. அலுவலகத்திற்கு சென்று மனு செய்து 2 அல்லது 3 நாட்கள் காத்திருந்து செயல் அலுவலர் அல்லது  ஆணையரின் கையொப்பம் பெற்ற பிறகே சான்றிதழினை பெற முடிகிறது. எனவே, அனைத்து உள்ளாட்சி மன்றங்களில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவேடுகளை ஆன்லைன் மயமாக்க வேண்டும் அல்லது அவற்றை ஒரே இடத்தில் பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : Birth ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா