செங்கல்பட்டு, மே 29: செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் 100க்கும் மேற்பட்ட பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
இங்குள்ள ஊழியர்கள், செல்போன் மூலம் வரும் ஆர்டரின் பேரில் செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், மகேந்திரா சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், கம்பெனிகளுக்கு சாப்பாடு, பீட்சா, பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை கொண்டு சென்று டெலிவரி செய்தனர். மேலும் ஒரு ஆர்டருக்கு டெலிவரி செய்பவருக்கு குறைந்த பட்சம் ₹35 முதல் ₹100 வரை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.
இந்நிலையில் இந்த நிறுவனம் குறைந்த பட்ச சம்பளத்தை ₹35ல் இருந்து ₹15 என குறைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை கம்பெனி முன்பு வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலூகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தங்களது சம்பள விஷயத்தில் உரிய முடிவு எடுக்காவிட்டால், வேலையை புறக்கணித்து பல்ேவறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், கம்பெனி நிர்வாகத்திடம் பேசினர். அதற்கு, கம்பெனி தரப்பில் 2 நாட்களில் இந்த பிரச்னைக்கு சுமுகமான முடிவு அறிவிக்கப்படும் என கூறியது பின்னர், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.