சென்னை, மே 29: தண்டையார்பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் பவர்ஹவுஸ் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர், சாஸ்திரி நகர், நேதாஜி நகர், இந்திகாந்தி நகர், பட்டேல் நகர், நெடுஞ்செழியன் நகர், சிவாஜி நகர், கொருக்குப்பேட்டை, நேரு நகர், கார்னேஷன் நகர், சுண்ணாம்பு கால்வாய் பகுதி, ஜெ.ஜெ நகர், மீனாம்பாள் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளன.
சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பு பெறுவது மற்றும் இதர புகார்கள் தெரிவிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர். தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைந்துள்ள இந்த மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் கட்டண வசூலிப்பு அறை, உதவி பொறியாளர்கள் அறை, பொருட்கள் இருப்பு அறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் சிதிலமடைந்தது. இதை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதனால், சில நாட்களில் படிக்கட்டின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது, படிக்கட்டின் கான்கிரீட் ஆங்காங்கே உடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள் அச்சத்துடன் இந்த படிக்கட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, இந்த சிதிலமடைந்த படிக்கட்டை விரைந்து சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த படிக்கட்டுகளை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.