×

பரமன்குறிச்சி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் சிறுமி கடத்தல் வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

உடன்குடி, மே 29: பரமன்குறிச்சி அருகே  இரண்டு  ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் சமத்துபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி சந்திரா. திருச்செந்தூர் கோயிலில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடற்கரையில் தங்கி பச்சை குத்தும் தொழில் ஈடுபட்ட  வாலிபர் ஒருவர் சந்திராவுக்கு அறிமுகமானார். வாலிபர்  சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும்   தங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுவதால் அவருக்கு  சந்திரா   சீருடையார்புரம் சமத்துவபுரத்தில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்தார். சந்திராவின் மகள்  சிவசக்தியை பள்ளிக்கு அழைத்துச்செல்வது, திருச்செந்தூர் கோயிலுக்கு தாயாரிடம் அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். நாளடைவில் குடும்பத்தில் ஒருவர் போன்று ஊரில் அனைவரிடமும் பழகத்தொடங்கினார்.

 இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி திடீரென சிறுமி சிவசக்தியுடன் வாலிபர் மாயமானார்.  பல இடங்களிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் சந்திரா  புகார் அளித்தார்.இவ்வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதனால் இவ்வழக்கில் போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர். எனவே, சிறுமி கடத்தல் வழக்கில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி துரிதமாக விசாரித்து சிறுமியை மீட்க வேண்டும் என்பதே குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Paramankurichi ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...