×

நாகர்கோவிலில் திருடிய பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை 1 வாரமாக நாடகமாடிய கூட்டாளி கைது

நாகர்கோவில், மே 29 :  நாகர்கோவிலில் திருடிய பணத்தில் பங்கு கேட்டதால் வாலிபரை அடித்து கொன்று அவரது கூட்டாளி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. நாகர்கோவில் கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (28). இவர் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து போலீசாரிடம் சிக்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 22ம்தேதி நாகர்கோவில் வடசேரி பாலமோர் ரோட்டில் கலைவாணர் கலை அரங்கம் எதிரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட  சித்ரா இந்து மத நூல் நிலைய கலையரங்க வராண்டாவில் முகத்தில் காயங்களுடன் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவரது அருகில் கருங்கல் தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண்(48) என்பவர் படுகாயங்களுடன் கிடந்தார். வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயங்களுடன் கிடந்த ஜாணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்குமா? அல்லது பணம் பங்கீடு விவகாரம் உள்ளிட்ட வேறு பிரச்னைகளில் கொலை செய்து இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. ஜாணிடம் நடந்த விசாரணையில் நாங்கள் 4,5 பேர் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் மாறி, மாறி தாக்கினார்கள். இதில் சிவக்குமாரை தாக்கி கொலை செய்தது யார்? என்பது எனக்கு தெரியாது என்றார். ஜாண் கூறுவது உண்மை தானா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். வடசேரி பஸ் நிலையத்தில் போதையில் சுற்றி திரியும் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிவக்குமாரும், ஜாணும் சேர்ந்து சம்பவ தினத்துக்கு முதல் நாள் இரவு ஒன்றாக சுற்றி திரிந்ததும், தியேட்டர் ஒன்றுக்கு படம் பார்க்க சென்றதும் தெரிய வந்தது.

 இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த ஜாண் சகஜ நிலைக்கு வந்தார். அவரை வடசேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜாண், பின்னர் முன்னுக்கு பின் முரணாக பேச தொடங்கினார். இதையடுத்து அவரிடம் விசாரணை அணுகுமுறையை போலீசார் மாற்றினர். இதில் சிவக்குமாரை அடித்து கொன்றதை ஜாண்  ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று காலை முதல் இவர்கள் பஸ் நிலைய பகுதியில் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜாணுக்கு ரூ.3 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. பின்னர் அந்த பணத்தில் மது வாங்கி குடித்துள்ளனர். அப்போது ஜாண் வைத்திருந்த பணத்தில் சிவக்குமார் பங்கு கேட்டுள்ளார். ஆனால் ஜாண் பங்கு கொடுக்க மறுத்துள்ளார். போதையில் இருவரும் வடசேரியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து ஜாணை சிவக்குமார் தாக்கி உள்ளார். பின்னர் இரவில்  சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அங்கு வைத்தும் மது அருந்தி உள்ளனர். போதையில் இருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மாறி, மாறி இருவரும் தாக்கி உள்ளனர். பாட்டிலை உடைத்தும், கட்டையாலும் ஜாண் சரமாரியாக தாக்கியதில் சிவக்குமார் இறந்துள்ளார். பின்னர் போதையில் மயங்கிய ஜாண், போதை தெளிந்ததும், காலையில் யாருக்கும் தெரியாமல் தப்பி விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் நூலக பணியாளர் பார்த்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால் சிக்கி கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜாணை போலீசார் கைது செய்தனர்.

Tags : partner ,teenager ,murder ,fight ,Nagercoil ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘