×

கிராமத்திற்கு காயலான் கடை பஸ்.. நகரத்திற்கு புதிய பஸ்.. உயிரோடு விளையாடும் அதிகாரிகள் திருமயம், அரிமளம் மக்கள் புலம்பல்

திருமயம், மே 28: புறநகரில் இயங்கிய பஸ்கள் தற்போது கிராமப்பகுதியில் டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன. எங்களுக்கு எப்போதும் ஓட்டை உடைசல் பஸ்கள்தானா? என திருமயம், அரிமளம் பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இன்றளவும் வசூலிலும் பராமரிப்பிலும் தனியார் பஸ்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய புறநகர் பஸ்கள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற போதும் இந்த புதிய பஸ்கள் ஓரிரு வருடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். காரணம் அரசு பஸ் இயக்குவதோடு சரி அதை அவ்வப்போது பராமரிப்பதில் அரசு மெத்தன போக்கையே கையாண்டு வருகிறது. உதாரணத்துக்கு ஒரு பஸ் எந்த இடையூறும் இல்லாமல் இயங்குமேயானால் அது பழுதடையும் வரை இயக்கும் பழக்கம் அரசு பணிமனைக்கு உள்ளது. இதனால் அரசு பஸ் பழுதடையும் வரை எந்த ஒரு பழுது பார்ப்பதற்கும் உட்படுத்தப்படுவது இல்லை. ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை எப்சி என்ற பேரில் அரசு பஸ்களுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு கழன்று  போன நட்டுகளுக்கு பதிலாக புதிய நட்டுகள் மாற்றுவதொடு அரசு பஸ்கள்  பராமரிப்பு முடிந்து விடுகிறது. இதனாலேயே புறநகர், டவுன் பஸ்கள் என்ற பாகுடிபாடின்றி அவ்வப்போது பழுதாகி நடுவழியில் நின்று பயணிகளை சோதனைக்குள்ளாக்குவதை அரசு பஸ்கள் வழக்கமாக கொண்டுள்ளன.

இதனிடையே தற்போது குறிப்பிட தகுந்தளவுக்கு புதிய புறநக பஸ்களை அரசு இயக்கியதால் ஏற்கனவே இயங்கிய பழைய பஸ்கள் அரசு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்கள் படு மோசமாக இருப்பதால் புறநகர பஸ்களாக இயங்கிய பஸ்கள் டவுன் பஸ்களாக மாறி வலம் வருவதை காண முடிகிறது. தற்போது அரிமளம், திருமயம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு அதிகாரிகள் இந்த பஸ்களை இயக்கி வருகின்றனர். இதனை கண்ட கிராம மக்கள் எப்போதும் எங்களுக்கு ஓட்டை உடைசல் பஸ்கள்தானா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நாங்களும் பணம் கொடுத்து தான் அரசு பஸ்களில் செல்கிறோம். எனவே பழைய புற நகர பஸ்களுக்கு வர்ணம் பூசி  டவுன் பஸ்களாக இயக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பழைய மாநகர பஸ்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு சென்னையில் ஓடி அடி வாங்கிய மாநகர பஸ்கள் பழுது பார்க்கப்பட்டு டவுன் பஸ்களாக வலம் வந்தது. இது பெரும்பாலும் அடிக்கடி பழுதடைந்து புதுக்கோட்டை பகுதி கிராம மக்களை சிரமத்திற்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அந்த பஸ்கள்அனைத்தும் நிறுத்தப்பட்டு புதிய நகர பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது அதேபோல் புறநகர பஸ்களாக ஓடியதை டவுன் பஸ்களாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பாதியாக குறைந்துபோன பஸ் போக்குவரத்து வசூல்

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பணத்தை சிக்கனப்படுத்த பொது போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பொது போக்குவரத்து கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியது. அதே சமயம் பஸ்சுக்கு செலவிடும் தொகையும் பைக் பெட்ரோலுக்கு செலவிடும் தொகையும் ஏறத்தாழ ஒரே அளவு இருந்ததால் மக்கள் பைக்குகள் வாங்க படை எடுத்துவிட்டனர். இதனால் தற்போது பெரும்பாலன வீடுகளில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பைக்குகள் இருப்பதை காண முடிகிறது. இதனால் மக்கள் சுமார் 30 கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குள் பயணம் செய்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை குறைத்துவிட்டனர். இந்நிலையில் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பஸ்சில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வசூலும் பாதியாக குறைந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், போக்குவரத்து துறை ஊழியர்களின் நேரமும் விரையமாகிறது.

Tags : city ,Armenia ,Tirumai ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்