×

மகன் சாவில் மர்மம்: விசாரணை நடத்த பெற்றோர் வலியுறுத்தல்

ராமநாதபுரம், மே 28:  ராமநாதபுரம் அருகே  கீழக்கரை அண்ணாநகர் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன்  மகன் கார்த்திக்ராஜா(21). கட்டிட தொழிலாளி. கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர். மனுவில்,   கடந்த ஏப்.22ம் தேதி வீட்டிலிருந்து சென்ற எனது மகன் கார்த்திக்ராஜா  வீடு திரும்பவில்லை. அன்று சிக்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம். 23.42019 அன்று வாலிநோக்கம் கடற்கரைக்கு ஒட்டிய கிணற்றுக்கு அருகே கார்த்திக்ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

என மகனை வெளி நபர்கள் கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எங்களால் வீட்டிலிருந்து வெளியில் வர அச்சமாக உள்ளது. எனது மகன் இறந்தது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அதிகாரிக்கு டோஸ்: புகார் மனு  தொடர்பாக கலெக்டர் வீரராகவ ராவ்  கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் வந்திருந்த மாவட்ட காவல்துறை நிர்வாக அதிகாரி (பொது) விஜயகுமாரை அழைத்து எப்ஐஆர் போட்டாச்சா என கேட்ட போது, எனக்கு தெரியாது என பதிலளித்தார்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத கலெக்டர், தெரியவில்லை என சொல்வதற்கு நீங்கள் எதற்கு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரவேண்டும். கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி இருக்கலாமே என கூறி 12.30 மணிக்குள் இச்சம்பவம் தொடர்பாக அனைத்து விபரங்களும் தெரிந்த பொறுப்பான அதிகாரி வரவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என அனுப்பி வைத்தார். காவல்துறை சார்பில் வந்த விஜயகுமார் சமீபத்தில் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். பதவி உயர்வு பெற்ற நிலையில் இது அவரது  முதல் குறைதீர்க்கும் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை