×

தஞ்சையில் 2 வயது மகளுடன் தாய் மாயம்

தஞ்சை, மே 28: தஞ்சையில் 2 வயது மகளுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார்.தஞ்சை அருகே மருங்குளம் நேரு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். விவசாயி. இவரது மனைவி சுகன்யா(21). இவர்களுக்கு 2 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுகன்யா மகளுடன் அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பாண்டியராஜன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து வல்லம் போலீசில் பாண்டியராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வயது குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.விவசாயி வீட்டில் 4 பவுன் செயின் திருட்டு:  திருவையாறு அடுத்த வளப்பக்குடி மெயின்ரோடு நடுப்படுகையை சேர்ந்த துரைராஜ் மகன் ரெங்கராஜ்(59). விவசாயி. இவர் புதிய வீடும், பழைய வீடும் பக்கத்து பக்கத்தில் உள்ளது.தினமும் பழைய வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு புதிய வீட்டில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பழைய வீட்டை தாழ்ப்பாள் போட்டுவிட்டு புதிய வீட்டில் தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது பழைய வீட்டின் கதவு திறந்தே கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்து இரும்பு பீரோவும், மர பீரோவும் திறந்து கிடந்தது.  பீரோவிலிருந்த 4 பவுன் திருட்டு போயிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து நடுக்காவேரி காவல்நிலையத்தில் ரெங்கராஜ் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் வருகை தந்து கைரேகையை பதிவு செய்தனர். இதுகுறித்து நடுக்காவேரி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை விபத்தில் வாலிபர் பலி: திருவையாறு அடுத்த கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(37). இவர் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கஸ்தூரிபாய் நகரிலிருந்து விளாங்குடி சென்று கொண்டிருந்தார். அப்போது விளாங்குடியிலிருந்து திருவையாறு நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. தனியார் சோப்பு கம்பெனி அருகே மெயின்ரோட்டில் வரும்போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கீழப்பழுவூரை சேர்ந்த கதிரேசன் மகன் முத்தமிழ்செல்வன்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மோதி முதியவர் பலி: திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கையன்(65). இவர் நேற்று மதியம் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது கல்லணையில் இருந்து கோவிலடி நோக்கி வந்த பைக் எதிர் பாராதவிதமாக தங்கையன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தோகூர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார்மீது பைக் மோதி கொத்தனார் பலி: அதிராம்பட்டினம் அருகிலுள்ள மிலாரிக்காட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரசீதா(30) என்ற மனைவியும், சிவானி என்ற 4 மாத பெண்குழந்தையும் உள்ளனர். பாலசுப்பிரமணியன் வழக்கம்போல் நேற்று காலை புனல்வாசலுக்கு கொத்தனார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அழகியநாயகிபுரம் என்ற இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த செல்வராசு என்பவர் தனது காரில் பட்டுக்கோட்டை சென்றுவிட்டு திரும்பி வந்தவர் சாலையிலிருந்து தனது வீட்டிற்கு காரை திருப்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பாலசுப்ரமணியன் நிலைதடுமாறி கார்மீது மோதியுள்ளார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேதுபாவாசத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tanjore ,
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை