திருத்துறைப்பூண்டி, மே 28: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு, வடக்கு மற்றும் நகரக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதை எதிர்த்தும், அந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் சிறப்பு விளக்கப் பேரவைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர்; காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும், விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் நிலை உண்டாகும் இதனால் மார்க்சிஸ்ட் கட்சி கிளை மற்றும் கிராம கூட்டங்களை நடத்தி இத்திட்டத்தினுடைய பாதிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதன் முதற்கட்டமாக வருகிற 31ம் தேதி அனைத்து கட்சி உறுப்பினர்களுக்குமான பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அடுத்தமாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை இருசக்கர வாகன பிரசாரம் நடைபெறுகிறது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை தடுக்க அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.