துறையூர், மே 28: துறையூர் அருகே செல்லிப்பாளையத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால், ஒரு பிரிவை சேர்ந்த தாய், மகனை தாக்கியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர் அருகே செல்லிப்பாளையம் கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக அருந்ததிய தெருவில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இக்கோயில் விழாவில் வெடி வைப்பது சம்பந்தமாகவும் சுவாமி வீதியில் உலா வருவது சம்பந்தமாகவும் இரு சமுதாய பிரிவினரிடையே இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக இத்தெருவை சேர்ந்த பெத்தாயி(70) என்ற மூதாட்டி வெயில் அதிகமாக இருந்ததால் மற்றொரு பிரிவினருடைய வீட்டுத் திண்ணையில் இளைப்பாறுவதற்காக அமர்ந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் எங்கள் வீட்டுத் திண்ணையில் நீ எப்படி அமரலாம் என்று கூறி மூதாட்டி பெத்தாயியை தாக்கியுள்ளனர்.
இதனை கண்டு தடுக்க வந்த பெத்தாயின் மகன் நடராஜன்(50) என்பவரையும் அப்பிரிவினர் கடுமையாக தாக்கி பிளேடால் கீரியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனைக் கண்டித்து ஒரு பிரிவினரை கைது செய்யக்கோரி 3 தினங்களுக்கு முன்னதாக ஒருபிரிவு மக்கள் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டததால் போலீசாரை கண்டித்து நேற்று துறையூர் பஸ் நிலையம் முன்பு குவிந்த செல்லிபாளையம் பகுதி மக்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர் பஸ் நிலையம் பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி ரோடு, பெரம்பலூர் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ்களும் மற்ற வாகனங்களும் அணிவகுத்து ஒரு மணி நேரமாக நின்றிருந்தன. இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.