×

இடைப்பாடி அருகே 9 ஆண்டுக்கு முன்பு ஆற்றில் வீசிய அம்மன் சிலையை கண்டெடுக்க கிராம மக்கள் முயற்சி

இடைப்பாடி, மே 28:  இடைப்பாடி அருகே 9 ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். மீனவர்கள் உதவியுடன் 4 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச்சென்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து, ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் விழாவை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவை நடத்துவதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர்கூட்டம் போட்டபோது, சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அருள்வந்து ஆடியுள்ளனர். அவர்கள், பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால் தான், பருவமழை பொய்த்து ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து, கோயிலில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே, மழை பெய்து ஊர் செழிக்கும். ஐஸ்வர்யம் பெருகும் என அருள்வாக்கு கூறி விட்டு மயங்கி விழுந்தனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் பூலாம்பட்டி கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக, காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், வறண்டு கிடக்கும் ஆற்றில் சிலையை தேட கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று காலை லாரி, டூவீலர்களில் ஆயிரக்கணக்கானோர் பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு திரண்டு சென்றனர். பின்னர், படித்துறையில் முகாமிட்ட கிராம மக்கள், அம்மன் சிலையை வீசிய பகுதியை தேடி அலைந்தனர். அப்போது, ஆளுக்கு ஒரு திசையை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் துணையுடன் சேறும், சகதியுமான பகுதியில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை தேடியும் சிலை கிடைக்கவில்லை. இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நாளை(இன்று) மீண்டும் சிலையை தேடலாம் என ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : village ,goddess ,river ,
× RELATED திரவுபதி அம்மன் பூங்கரக உற்சவம்