திருச்செங்கோடு, மே 28: எலச்சிபாளையம் ஒன்றியம் சக்கராம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுகிணற்றுக்கு கம்பிவலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் ஊராட்சியில், சக்கராம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஊரில் அமைக்கப்பட்ட பொது கிணற்றின் மூலம், கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகித்து வந்தனர். சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் சொற்ப அளவே தண்ணீர் உள்ளது. தற்போது இந்த கிணறு பயன்பாடின்றி உள்ளது. இந்த திறந்தவெளி கிணற்றுக்கு சிறிய அளவிலான சுற்றுச்சுவரே உள்ளது. கிணற்றுக்கு கம்பி வலை ஏதும் போடப்படவில்லை. வீடுகளுக்கு மத்தியில் இந்த பொதுகிணறு இருப்பதால், ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்டவை தவறி விழும் வாய்ப்பு உள்ளது. தவிர, தற்போது கோடை விடுமுறையால் வீட்டில் உள்ள குழந்தைகள், இந்த கிணற்றின் அருகில் விளையாடி வருகின்றனர். சுற்றுச்சுவர் குறைவாக உள்ளதால், குழந்தைகள் தவறி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கிணற்றின் மேற்புறம் கம்பிவலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.