×

உணவு பாதுகாப்பு துறையில் காய்,கனி வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும்

நாமக்கல், மே 28: நாமக்கல் மாவட்டத்தில் காய்கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி, கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம், மற்றும் சப்போட்டா ஆகிய இதர பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிபொருள்களை (எத்திப்பான், எத்திலின்) தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கூடாது. கால்சியம் கார்பைடு கற்களையோ அல்லது செயற்கை வேதி பொருள்களை தெளித்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொது மக்களுக்கு உணவு உபாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவையும் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது.

கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வில், கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப் பொருட்களை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அறிவுறுத்தியதற்கு பிறகும், கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த நபர் மீது, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி நாமக்கல் காய்கறி, பழ அங்காடி, வணிகர்கள் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உணவு பாதுகாப்பு சட்டத்தில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வோர் அனைவரும், இந்த சட்டத்தினை முழுமையாக கடைபிடித்து, தங்களது உணவு வணிகத்தினை பதிவு அல்லது உரிமம் பெற்று நுகர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான தரமான காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Tags : Kai ,merchants ,Kani ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...