சாத்தான்குளம், மே 28: சாத்தான்குளம் அருகே அசன விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2பேர் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 15பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாத்தான்குளம் அருகே அருளூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய விழாவில் கடந்த 25ம் தேதி அசனப்பண்டிகை நடந்தது. அதே பகுதியை சேர்ந்த மேரி என்பவர் பாத்திரத்தில் சாப்பாடு கேட்டார். கோயில்ராஜ் சாப்பாடு கொடுக்க மறுத்தார். இதில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த பால்ராபர்ட் சிங்(59) என்பவர் மோதலை தடுத்து சமாதானப்படுத்தினார். இந்நிலையில் பால்ராபர்ட்சிங் இரவு ஆலயம் முன்பு நின்ற போது கோயில்ராஜ் உள்ளிட்ட 10பேர் அவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதேபோல் அதே ஊரைச்சேர்ந்த தங்கத்துரை மகன் புஷ்பராஜ் (45) என்பவரை அகஸ்டின், பால்ராபர்ட் சிங் ஆகியோர் அவதூறாக பேசி கல்லால் தாக்கினராம். காயமடைந்த பால்ராபர்ட்சிங், புஷ்பராஜ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்கப்பட்ட பால்ராபர்ட்சிங், ஆழ்வார்திருநகரி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆவார்.பால்ராபர்ட்சிங் புகாரின்பேரில் கோயில்ராஜ், பேரின்பராஜ் மகன் மனுவேல் மற்றும் ராஜன், மிகாவேல், தங்கத்துரை, புஷ்பராஜ், பட்டு, இமானுவேல், ஈசாக், ஞானதுரை ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல் புஷ்பராஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின், பீட்டர், ஜஸ்டின், காபிரியேல், பால்ராபர்ட்சிங் ஆகிய 5பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சாத்தான்குளம் எஸ்.ஐ. சிலுவைஅந்தோணி விசாரணை நடத்தி வருகிறார்.