நாகர்கோவில், மே 25: கன்னியாகுமரி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றிலும் பொன்.ராதாகிருஷ்ணன் பின்தங்கிய நிலையில் தபால் ஒட்டில் அதிகம் பெற்றிருந்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரின் முன்னிலை தொடங்கியது. முதல் சுற்றில் அதிகபட்சமாக 26 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்று தனது வெற்றிக்கணக்கை தொடங்கினார். முதல் சுற்றில் பொன்.ராதாகிருஷ்ணன் மிக குறைவாக 9828 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.அடுத்துவந்த சுற்றுகளில் எல்லாம் 21 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வாக்குகள் வரை பெற்று வசந்தகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வாக்குகள் வரை ஒவ்வொறு சுற்றிலும் பெற்று வந்த பொன்.ராதாகிருஷ்ணன் 13 வது சுற்றில் 17 ஆயிரத்து 723 வாக்குகள் பெற்றார். இது அவர் அதிகபட்ச வாக்குகள் பெற்ற சுற்றாக அமைந்தது. அந்த சுற்றில் எச்.வசந்தகுமார் 19035 வாக்குகளை பெற்றிருந்தார். அந்த சுற்றில் மட்டுமே அவர் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த சுற்றாக அமைந்தது.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகள் கை கொடுக்கும் என்று அவரது கட்சியினர் நம்பியிருந்தனர். ஆனால் இந்த இரு தொகுதிகளிலும் அவர் ஏற்றம் பெற முடியாத நிலையே தொடர்ந்தது.கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை விட பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 2704ம், வசந்தகுமாருக்கு 2608 வாக்குகளும் கிடைத்திருந்தன. மொத்தம் உள்ள 6802 தபால் ஓட்டுகளில் 1050 ஓட்டுகள் செல்லாதவை ஆகும். ஆசிரியர், அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுகின்றவர்கள் பதிவு செய்கின்ற ஓட்டில் 1050 ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தபால் வாக்குகள் விபரம்
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜ ) - 2704
எச்.வசந்தகுமார்(காங்)- 2608
இ.லெட்சுமணன் (அமமுக)- 19
எபினேசர் (மய்யம்) - 60
ஜெயின்டீன் (நாம் தமிழர்) - 259
பாலசுப்பிரமணியன் (பகுஜன் சமாஜ்) - 19
சுபி (நாளைய இந்தியா) - 5
பால்ராஜ் (சிபிஐஎம்எல்)- 17
ஜாக்சன் (டிசிஎல்எப்)- 3
இசக்கிமுத்து (சுயே)- 3
ஈனோஸ் (சுயே)- 3
சாந்தகுமார் (சுயே)- 5
நாகூர் மீரான் பீர்முகம்மது (சுயே)- 2
பேச்சிமுத்து (சுயே)- 0
ரவிகுமார் (சுயே)- 2
நோட்டா - 43
மொத்தம் - 5752