கந்தர்வகோட்டை, மே 25: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததையடுத்து கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 237 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என கண்டறியும் விவிபேட் எந்திரங்களை வாக்கு பதிவு எண்ணிக்கை முடிந்த கையோடு நேற்று அதிகாலையிலேயே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்போடு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைப்பு அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா மற்றும் தாசில்தார் கலைமணி முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
யாருக்கு வாக்களித்தோம் என்ற எந்திரத்தை 45 நாட்களுக்கும், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் 6 மாத காலத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்ற உத்தரவு வந்தால் மீண்டும் காண்பிக்கும்படி கண்காணிப்பு காமிரா உதவியுடன் போலீஸ் பாதுகாப்போடு கண்காணித்து வரப்படும். தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளருக்கோ சந்தேகம் வந்து நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் காண்பிக்க வசதியாக பாதுகாக்கப்பட்டு வரும். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு வைப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அறையின் உள்ளே வெளியே கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.