பாடலூர், மே 25: திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்ஆலத்தூர் தாலுகா காரை பிரிவுச் சாலைப் பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காரை, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அயினாபுரம், அணைப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பிரிவுச் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம், ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், வங்கி என்பது உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகப் பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் .
ஆலத்தூர் தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள காரை, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அயினாபுரம், இலுப்பைக்குடி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொது மக்களும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு அலுவலகப் பயன்பாட்டுக்காக நாள்தோறும் வந்து செல்ல வேண்டும். மேலும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டும் . இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயில் மழை காலங்களில் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அந்த பகுதியில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும். பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.