காரைக்கால், மே 25: காரைக்கால் மாவட்டத்தில், வரும் 28ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்டத்தில், ஆண்டுதோறும் கோடை விடுமுறையிலேயே, பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விடுமுறை முடியும் தருவாய் நெருங்கியும் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே, பள்ளி திறக்கும் முன், வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, முன்னாள் அமைச்சர் நாஜிம், அரசு உதவிபெறும் பெற்றோர் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள், கல்வி நிலைய வாகனங்கள் அனைத்தையும் தர சோதனைக்குட்படுத்த மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறையை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வரும் மே 28ம் தேதி காரைக்காலில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான, குறிப்பாணை போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார்.