குமாரபாளையம், மே 25: குமாரபாளையத்தில் காவிரி கரையோரத்தில், தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர் வலியுறுத்தி உள்ளனர். குமாரபாளையம் காந்தியடிகள் தெருவில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் வசதிக்காக படிகள், துணி துவைக்கும் திண்டுகள், தண்ணீர் குழாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான பணிகள் தரம் குறைவாக மேற்கொள்ளப்பட்டதால், படிகள் மற்றும் துணி துவைக்கும் திண்டுகள் வீணாகியுள்ளது. கையால் சுரண்டினாலே சிமெண்ட் கலவை உதிர்ந்து விழுகிறது. இந்நிலையில், குமாரபாளையம் முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள், காந்தியடிகள் தெரு காவிரி படித்துறைக்கு நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். இதில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டது தெரிய வந்தது. அப்போது, அதிகாரிகள் காவிரிக்கரை பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற கட்டுமான பணிகள் தொடர்ந்தால், மக்களை திரட்டி போராட்டத்தில் நடத்தப்படும் என முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் தெரிவித்தார்.