ஊட்டி, மே 25: சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு குன்னூர்-ரன்னிமேடு இடையே வரும் 27 முதல் 31 வரை நீராவி இன்ஜினில் இயங்க கூடிய சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தாண்டு கோடை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மலை ரயில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் வார நாட்களில் குன்னூர் - ரன்னிமேடு இடையே நீராவி இன்ஜினில் இயங்க கூடிய பல்சக்கர தண்டவாளத்தில் பயணிக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்கு ரன்னிமேடு பகுதிக்கும், மறு மார்க்கமாக ரன்னிமேட்டில் இருந்து குன்னூருக்கு மதியம் 1 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. 3 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் முதல் வகுப்பில் 56 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 30 இருக்கைகள் என மொத்தம் 86 இருக்கைகள் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் குன்னூர் - ரன்னிமேடு இடையே ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.