×

திண்டிவனம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு

திண்டிவனம், மே 25: திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் ஹரி (33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று, வடஆலப்பாக்கம் ராமதாஸ்நகரில் ராமு என்பவரது வீட்டில் கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு காலை முதல் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்த வீட்டின் அருகில் உள்ள சவுக்கு தோப்பில் ஹரி சடலமாக கிடந்துள்ளார். இதனை அவருடன் கட்டிட வேலை செய்த பெண் தொழிலாளி ஒருவர் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார். பின்னர் திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து வந்த போலீசார் ஹரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் ராமு மற்றும் ஹரியுடன் வேலை பார்த்த சக தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலையின்போது ஹரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஹரிக்கு மோகனா என்ற மனைவியும், 2 மகளும், ஒருமகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,building worker ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...