புதுச்சேரி, மே 25: புதுச்சேரி மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம்தமிழர் கட்சி உட்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர். இதேபோல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 8 பேரில் 6 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். புதுச்சேரி மக்களவை தொகுதியில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 252 ஓட்டுகள் பதிவானது. இதில் 6ல் ஒரு பங்காக 1 லட்சத்து 31 ஆயிரத்து 708 வாக்குகளை வேட்பாளர்கள் பெற வேண்டும். அதன்படி மக்களவை தேர்தலில் 4.44 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற காங்கிரசை தவிர என்ஆர் காங்கிரஸ் அதிக வாக்குகள் (2.47 லட்சம்) பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்துக்கொண்டது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பதிமராஜ், மக்கள் நீதி மய்யம் எம்ஏஎஸ் சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளா பேகம், புதுச்சேரி வளர்ச்சி கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அமமுக மற்றும் 7 சுயேட்சைகள் உட்பட 16 பேர் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் வேட்பாளர்கள் செலுத்தியிருந்தனர்.
அதேபோல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான 22 ஆயிரத்து 985 வாக்குகளில் 3 ஆயிரத்து 830 வாக்குகளை பெற்றால்தான் டெபாசிட்டை தக்க வைக்க முடியும். அதன்படி வெற்றிபெற்ற திமுகவை தவிர்த்து என்.ஆர். காங்கிரஸ் 9,367 வாக்குகளை பெற்றதால் டெபாசிட் காலியாகவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சி கவுரி, புதுச்சேரி வளர்ச்சி கட்சி ரவிசங்கர், தவாக ஸ்ரீதர் ஆகியோரும், 3 சுயேட்சைகளும் உட்பட 6 பேர் டெபாசிட்டை பறிகொடுத்தனர். இதில் 5 பேரை நோட்டா பின்னுக்கு தள்ளியது. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 653, மக்களவை தொகுதியில் 12,199 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது.