×

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் ஓடஓட வெட்டிக்கொலை பட்டப்பகலில் 4 பேர் கும்பல் வெறிச்செயல்

அரக்கோணம், மே 25: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோ டிரைவரை நேற்று பட்டப்பகலில் ஓடஓட வெட்டி கொலை செய்தது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பு (என்ற) பரோட்டா(35), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை 11 மணியளவில் பழனிப்பேட்டை வழியாக ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் அன்புவை திடீரென சுற்றிவளைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பியோடினார். பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே கத்தியுடன் அந்த கும்பல், ஆட்டோ டிரைவரை விரட்டியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்ப முயன்ற அன்பு தலைதெறிக்க ஓடினார்.

இருப்பினும் ரயில் நிலையம் ஒட்டி குறுகலான பகுதியில் இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சிக்கிக்கொண்டார். அப்போது அவரை அந்த கும்பல் சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் நடந்து ரயில் நிலையம் சென்று அவ்வழியாக வந்த ஒரு ரயிலில் ஏறி தப்பியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அரக்கோணம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான அன்பு திருமணமானவர். இவருக்கு, ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரியவந்தது. எனவே, முன்விரோதம் காரணமாக அவரை மர்மகும்பல் கொலை செய்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : railway station ,Auto Arrow ,Arakkonam ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...