×

திமுக வெற்றியால் தொண்டர்கள் உற்சாகம்

பொள்ளாச்சி, மே 24: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மையத்தில், நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கையை அறிய, உடுமலைரோட்டில் ஆங்காங்கே திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியினர், அமமுகவினர் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கூடிநின்றனர்.

இதில், காலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கி, முதல் சுற்று முடிந்தபோது திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் பிற வேட்பாளர்களை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்ற தகவல் கிடைத்ததும், வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே நின் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து கோஷம் எழுப்பினர்.

அதன் பின் தொடர்ந்து அடுத்தடுத்து சுற்றிலும் திமுக முன்னணி நிலவரமறிந்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடுமலை ரோடு வழியாக வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.   திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றிபெற்றத்தையடுத்து, உடனே திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். அப்போது தொண்டர்கள் பலர் சண்முகசுந்தரத்தை, தங்களின் தோளில் தூக்கி கொண்டு, ஊர்வலமாக வந்து கொண்டாடினர்.

பொள்ளாச்சி சண்முகசுந்தரம் பேட்டி
பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகசுந்தரம்  கூறியதாவது: நாளைய தமிழகத்திற்கு ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று கூறி மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகாலம் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைக்க பொள்ளாச்சி திமுக., தொண்டர்கள் தயாராக உள்ளனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. எடப்பாடி ஆரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் என்னை வெற்றி பெற செய்துள்ளனர். இவ்வாறு சண்முகசுந்தரம் கூறினார்.

Tags : volunteers ,victory ,DMK ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு