×

அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன்

தர்மபுரி, மே 24: தர்மபுரி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உரித்தாக்குகிறேன். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, எனது தாத்தா வடிவேல்கவுண்டர் ஆகியோரது ஆசியுடன் வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள், தோழமை கட்சியினர் அயராது உழைத்தனர். மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. டாக்டர் அன்புமணி ராமதாசை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது எனது ஆசை. அவரை தோற்கடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட மக்களின் தேவை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வெளிமாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.

மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நத்தமேடு பகுதியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்திருந்தார். ஆனால், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருந்தும், தர்மபுரி தொகுதி வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாய்ஜாலம் மட்டுமே செய்து வந்தார். தர்மபுரி மாவட்டத்தில், மலை கிராம மக்கள் போதிய அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். பள்ளிகளில் சுகாதார வசதி, நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி. இந்த வெற்றியை தொண்டர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : facilities ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...