×

ஓமலூர், காடையாம்பட்டியில் கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்

ஓமலூர், மே 23: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் தட்டைப்பயறு, கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓமலூர் தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த 3 வட்டாரத்தில், 12 ஆயிரத்து 720 விவசாயிகள் உள்ளனர். இவர்கள் சுமார் 13 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது குறுகிய காலப்பயிராகவும், குறைந்த தண்ணீரில் விவசாயம் மேற்கொள்ளும் தட்டை, கடலை போன்ற விதை பயிர்களை, ஓமலூர் வேளாண் விதை விற்பனை மையத்தில் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இது குறித்து ஓமலூர் வேளாண் உதவி இயக்குனர் நீலாம்பாள் கூறுகையில், ‘கடந்த ரபி பருவம் முழுவதும், கடும் வறட்சி நிலவியது. தற்போது காரீப் பருவம் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை துவங்கியுள்ளது. சித்திரை பட்டம் விதைப்பு பணியை துவக்க விவசாயிகள் ஆர்வமுடன் விதைகளை வாங்கி சென்றனர். கடந்தாண்டு 1,800 ஏக்கரில் தட்டைபயறும், கடலை 1,500 ஏக்கரும் பயிரிட்டு இருந்தனர். தமிழகத்தில் பருவமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மழையை எதிர்பார்த்து விதைகளை வாங்கிச் செல்கின்றனர்,’ என்றார்.

Tags : sowing ,ocean ,Omalur ,Kodayamatti ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!