×

சேலம் அருகே வாலிபர் அடித்துக்கொலை

சேலம், மே. 23: சேலம் அருகே வாலிபர் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில், விபத்து என கூறி மருத்துவமனையில் சேர்த்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர். சேலம் அருகேயுள்ள காடையாம்பட்டி கஞ்சாநாயக்கன்பட்டி ஐயர் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்(36). இவரது மகளுக்கு கடந்த 19ம்தேதி நீராட்டு விழா நடந்தது. இதில் தாய் மாமனான கனகராஜ்(33) வந்து சீர்வரிசை செய்தார். அப்போது வேணுகோபாலின் உறவினரான கார்த்தி(28) என்பவர் குடிபோதையில் வந்து கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரையும் வேணுகோபால் சமாதானம் செய்து, கனகராஜை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு வந்துள்ளார்.

அப்போது பின் தொடர்ந்து சென்ற கார்த்தி, கனகராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது பின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்து வந்த வேணுகோபால், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு சென்று விட்டு வந்துள்ளார். மறுநாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கனகராஜ் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமமனையில் சேர்த்தனர். அப்போது வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். டாக்டர்களும் அவ்வாறே பதிவு செய்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்துபோனார். போலீசாரும் விபத்து என விசாரித்து வந்த நிலையில், கனகராஜின் தாய் பழனியம்மாள்(62) தனது மகனை அடித்து கொன்று விட்டதாக தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அப்போது நடத்திய விசாரணையில்தான், கனகராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஐயர் தெருவை சேர்ந்த கார்த்தி, விபத்து என நாடகமாடிய வேணுகோபால் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வேணுகோபாலை கைது செய்தனர். கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : adolescents ,Salem ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை