திருச்செங்கோடு, மே 23: எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மக்கள்பாதை அமைப்பின் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிலரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு சட்டபஞ்சாயத்து இயக்கம் கண்ணையன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கினார். மேலும் இளைஞர்கள் ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராம நிர்வாகம், கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வரவு செலவு, வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கினார். கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற பொதுப்பணித்துறை சார்ந்த தகவல்களை பெறுவது எப்படி என்றும், கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும், நிதி முறைகேடு குறித்த தகவல்களை எவ்வாறு பெற்று, புகார் கொடுக்க வேண்டும் என்றும் விளக்கினார். அதை தொடர்ந்து இளைஞர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பேசினார். ஒன்றிய பொறுப்பாளர் தீபக்குமார் நன்றி கூறினார். இதில் 75க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.