ராசிபுரம்,மே 23: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில், 2017 -2018 மற்றும் 2018 -2019-ம் கல்வியாண்டில் பிளஸ்2 முடித்த மாணவ, மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்2 பொதுத்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், இந்த வேலை வாயப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு, 12 மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ₹10 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் ஆரம்ப ஊதியமாக ஆண்டுக்கு ₹2.25 லட்சம் வரை ஹெச்.சி.எல் நிறுவனம் வழங்கும்.
வேலையில் சேர்ந்த பிறகு, ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டு பிசிஏ., அல்லது பிட்ஸ் பிலானில் 4 ஆண்டுகள் பிஎஸ்சி., பட்டப்படிப்பை தொடரலாம். மேற்கூறிய உயர் கல்வி கட்டணத்தில் ஹெச்.சி.எல் நிறுவனமும் பங்கேற்கும். இதுகுறித்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் கூறியதாவது: பாவை பொறியியல் கல்லூரியில் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் சேர்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பிளஸ்2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.