×

ஆற்காடு அருகே பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு அடி, உதை 2 வாலிபர் கைது

ஆற்காடு, மே 23:  ஆற்காடு அருகே பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியரை இரும்பு தடியால்  தாக்கிவிட்டு கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக நாடகமாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த கலவை மேட்டு செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் காமராஜர்(41). பைனான்சியர். இவரிடம் கலவை அப்பாதுரை பேட்டை பகுதியை சேர்ந்த சுபேதார் மற்றும் கரீம் ஆகியோர் பைனான்சில் பணம் வாங்கி உள்ளனர். அந்த பணத்தை காமராஜர் திருப்பி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடந்த 17ம் தேதி இரவு காமராஜர் வீட்டுக்கு சென்று அவரை கல்லாலும், இரும்பு தடியாலும் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அவர்களே கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, பைக்கில் வரும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது என்று மருத்துவமனையில் கூறி சேர்த்துவிட்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் பைக்கில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விசாரணையில் சுபேதார், கரீம் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து கலவை இன்ஸ்பெக்டர் நிர்மலா நேற்று முன்தினம் கொலை முயற்சி வழக்காக மாற்றி பதிவு செய்து சுபேதார், கரீமை நேற்று கைது செய்து, விசாரித்து வருகிறார்.

Tags : men ,Arcot ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!