கோவை, மே 22: கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை மக்களவை தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை-தடாகம் ரோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், செல்வகுமார் ஆகியோர் தலைமையில், 10 உதவி கமிஷனர்கள், 39 இன்ஸ்பெக்டர்கள், மத்திய ஆயுத படை போலீசார், சிறப்பு காவல்படை மற்றும் உள்ளூர் போலீசார் உள்பட 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் இன்று இரவு முதல் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.