நாமக்கல், மே 22: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நாளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை (23ம்தேதி) திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேசைக்கும் ஒரு நுண் பார்வையாளர் வீதம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நுண்பார்வையாளர்கள் மத்திய அரசு பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள். மேலும் தபால் வாக்கு எண்ணும் 4 மேசைகளுக்கும் ஒரு நுண் பார்வையாளர் தபால் வாக்கு எண்ணும் பணியை பார்வையிடுகிறார்கள். நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் வாணி மோகன் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து, நுண்பார்வையாளர்களின் பணிகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
உணவு வழங்க வேண்டு கோள்: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில், நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 29 பேரின் முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று மாலை வரை 1200க்கும் மேற்பட்ட முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆசியாமரியம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுயேட்சை வேட்பாளர் நடராஜன் கூறுகையில், தேர்தல் ஆணையம் பொது வேட்பாளரிடம் இருந்து ₹25 ஆயிரமும், எஸ்சி, எஸ்சிடி வேட்பாளரிடம் ₹12,500ம் டெபாசிட் பெற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முவர்களுக்கு உணவு வழங்க மறுக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இலவச உணவு வழங்க வேண்டும் என்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான ரமேஷ் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு உணவு வழங்குவதில்லை. இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.