×

திறந்தவெளி கழிவறையான திருத்தங்கல் மயான சாலை சுகாதார சீர்கேடு அதிகரிப்பு

சிவகாசி, மே 22: திருத்தங்கல்லில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலையை பலர் திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துவதால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கப்படுகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கல் 18வது வார்டில் மயான சாலை செல்லும் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அருகே மூன்று சுகாதார வளாகங்கள் உள்ளன. இவை தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடின்றி உள்ளன. சுகாதார வளாகங்களை பயன்படுத்த முடியாததால் மக்கள் மயான சாலையை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது.

மேலும் சிலர் வாறுகால் பகுதியை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துவதால் குடியிருப்பு வாசிகள் சுகாதார சீர்கேட்டை சந்தித்து வருகின்றனர். மயான சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் திறந்தவெளி கழிவறை துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்று நகராட்சியில் ஏராளமான சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசின் நிதி பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 18வது வார்டில் மட்டும் 5 சுகாதார வளாகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார வளாகங்களை தண்ணீர் வசதியுடன் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது