ராஜபாளையம், மே 22: ராஜபாளையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தாலுகா அலுவலகம் எதிரே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள புளியங்குளம் கண்மாய் கரையை பொதுமக்கள் கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் ராஜபாளையத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பு சார்பில் கண்மாய்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டது. இப்பகுதியை பசுமையாக்கும் நோக்கில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில் தாசில்தார் ராமச்சந்திரன், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம், அரசு தலைமை மருத்துவர் பாபுஜி, நகராட்சி தலைமை பொறியாளர் நடராஜன், ஹிமாலயாவில் செயல்படும் ஓம்காரனந்தா ஆசிரம தலைவர் விஷ்வேஷ்வரநந்த சரஸ்வதி சுவாமிகள், ஆசிரம பொதுச்செயலாளர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சோமசேகரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.