திருச்சி, மே 22: மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சியில் கலந்துகொண்ட 300 மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணன் வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சி மாவட்டத்திலுள்ள 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த மே 1 முதல் 21 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கையுந்துப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் டேக்வோண்டா ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பணிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை, மாலை ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வந்தது. மேலும் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட 300 மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாநகர காவல்துறை துணை கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) மயில்வாகனன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.