×

கோர்ட்டில் பீரோவை உடைத்து ஆவணங்களை திருட முயன்றதாக உதவியாளர் மீது வழக்கு

ஜெயங்கொண்டம், மே 22: கோர்ட்டில் பீரோவை உடைத்து ஆவணங்களை திருட முயன்றதாக உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனஞ்செயன் (42) என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இதே கோர்ட்டில் உடையார்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன் (33) உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனஞ்செயன் வெளியில் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது அங்கு வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தனஞ்செயன், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அலாவுதீன் பீரோவை திறந்து பார்த்து கொண்டிருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து பீரோவை உடைத்து ஆவணங்களை எடுக்க முயன்றதாக அலாவுதீன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : assistant ,Biro ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை