×

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு

திருவள்ளூர், மே 22: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு வரும் ஜூன் 3ல் துவங்கவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள்தோறும் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.  இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் ‘’பயோமெட்ரிக்’’கருவி வினியோகித்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு, ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் 25 பள்ளிகளில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது 299 அரசு பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறுகையில், ‘’மாவட்டத்தில் 299 அரசு பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை பள்ளிகளில் பொருத்தும் பணிகள் நடந்துவருகிறது. ஜூன் 3ம் தேதி முதல் இவை பயன்பாட்டுக்கு வரும்.

இதன்கீழ், ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ஒரு வினாடி தாமதித்தாலும் கருவியில் பதிவு செய்ய முடியாது. மீண்டும் பிற்பகல் 12 மணிக்கே கருவி செயல்பாட்டிற்கு வரும். அதன்பிறகு வருகையை பதிவு செய்யலாம். ஆனால், அரைநாள் ஆப்சென்ட் ஆகும். மேலும், ஆசிரியர்கள் மதியம் 1.30 மணிக்குள் மதிய வேளைக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். மீண்டும் மாலை, 4.30 மணிக்கே கருவி செயல்படத் துவங்கும். அதன்பிறகே ஆசிரியர்கள் பணியை நிறைவு செய்ய முடியும்’ என்றார்.

Tags : visits ,government school teachers ,
× RELATED பிரதமர் மோடி கோவை வருகை; 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!