மூணாறு,மே 21: மூணாறு அருகில் பழைய மூணாறு பகுதியில் தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகே 10 பேர் அடங்கிய கும்பல், காடுகளை வெட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். தகவலறிந்து தேவிகுளம் துணை கலெக்டர் வருவதை அறிந்த கும்பல் தலைமறைவானது. மூணாறில் சில நில மாஃபியா கும்பல்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்த வருகின்றன. நேற்று பழைய மூணாறு பகுதியில் தனியார் விடுதிக்கு அருகில் பட்டப்பகலில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தேவிகுளம் துணை கலெக்டர் ரேணுராஜூக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு அவரும், வருவாய் துறை அதிகாரிகளும் விரைந்தனர். அவர்களைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் தலைமறைவானது.
பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் துணை கலெக்டர் ரோணுராஜூ கூறுகையில்,`` ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை பரிசோதித்து அரசுக்கு சொந்தமான இடம் என்று தெரிந்தால் ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை பாயும். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக புதிய சட்டங்கள் வந்த நிலையில் பட்டப்பகலில் மூணாறில் நடந்த இந்த ஆக்கிரமிப்பு சம்பவத்திற்கு பின்னால் சில மாஃபியா கும்பல்கள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.