தேனி, மே. 21: கொல்கத்தாவில் பாஜகவினரால் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க அமைப்புகளான ஏஐடிஎஸ்ஓ, ஏஐடிஒய்ஓ, ஏஐஎம்எஸ்எஸ் அமைப்புகளின் சார்பில் தேனி நகர் பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். எஸ்யுஎஸ்ஐ மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் வால்டர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மதச்சார்பற்ற விஞ்ஞானபூர்வ கல்விக்கு பாடுபட்டவரும், இந்திய ஜனநாயக இயக்கத்தை சேர்ந்தவருமான ஈஸ்வர சந்திரவித்யாசாகர் சிலையை கொல்கத்தாவில் உடைத்த பாஜக, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி தொண்டர்களை அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.